நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் வியாழக்கிழமை (ஆக. 15) கிராமசபைக் கூட்டம் நடைபெறும் என நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு : சுதந்திர தின விழா நாளான ஆகஸ்ட் 15-ஆம் தேதி நாகை மாவட்டத்தில் உள்ள 434 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெறும். கிராம ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவின அறிக்கை, கொசு ஒழிப்புப் பணிகள், பிளாஸ்டிக் பொருள்கள் ஒழிப்பு, பொது விநியோகத் திட்ட சமூகத் தணிக்கை, கஜா புயலால் வீடுகளை இழந்தவர்களின் பட்டியல், மழைநீர் சேகரிப்பு உள்ளிட்டவைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.
எனவே, பொதுமக்கள், ஊராட்சி பேரிடர் மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்தில் தவறாமல் பங்கேற்குமாறு ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் கேட்டுக் கொண்டுள்ளார்.