மயிலாடுதுறையில் கட்டடத் தொழிலாளி செவ்வாய்க்கிழமை இரவு சக தொழிலாளர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இக்கொலையில் தொடர்புடைய இருவரை மயிலாடுதுறை போலீஸார் புதன்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து போலீஸ் தெரிவித்த தகவல்கள்: மயிலாடுதுறை அருகே உள்ள மாப்படுகை கிராமம், வெற்றி விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் நாகராஜன் (55). கட்டடத் தொழிலாளி. செவ்வாய்க்கிழமை மாப்படுகை கிராமத்தில் வீடு கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த நாகராஜன் மற்றும் சக தொழிலாளர்களான செல்வம், ராஜா ஆகியோர் பணிமுடிந்து, இரவு அதே வீட்டில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். பின்னர், மதுபோதை அதிகமானதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு ஏற்பட்டது. இதில் செல்வம், ராஜா ஆகியோர் நாகராஜனை கட்டையால் தாக்கியதாக தெரிகிறது. இதனால், மயங்கி விழுந்த நாகராஜன், அவ்விடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து, கொலையை மறைத்து தற்கொலை போன்று சித்திரிக்க எண்ணிய செல்வம், ராஜா இருவரும், அப்பகுதியில் மின்வெட்டின் காரணமாக நிலவிய இருட்டைப் பயன்படுத்தி, அவ்வீட்டின் அருகில் உள்ள மாப்படுகை ரயில்வே தண்டவாளத்தில் நாகராஜனின் உடலை இழுத்துச் சென்று போட்டதாக தெரிகிறது. அப்போது, அவ்வழியாக மயிலாடுதுறை நோக்கி வந்த கம்பன் எக்ஸ்பிரஸ் ரயில் ஓட்டுநர், தண்டவாளத்தில் உடல் கிடப்பதைக் கண்டு ரயிலை நிறுத்தியுள்ளார்.
உடனே அவர்கள் மயிலாடுதுறை போலீஸுக்கு தகவல் தெரிவித்தனர் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, உடலை கைப்பற்றி மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீஸார், தலைமறைவாக இருந்த செல்வம், ராஜா ஆகிய இருவரையும் புதன்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.