மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்ககோரும் தீர்மானம் உள்ளிட்ட 3 தீர்மானங்களை கிராமசபைக் கூட்டங்களில் நிறைவேற்றக் கோரி பொது தொழிலாளர்கள் சங்கம் சார்பில் துண்டுப் பிரசுரங்கள் செவ்வாய்க்கிழமை விநியோகிக்கப்பட்டன.
பொது தொழிலாளர்கள் சங்கத் தலைவர் ஜெகவீரபாண்டியன் தலைமையில் சீர்காழி பகுதியைச் சேர்ந்த கிராம ஊராட்சி செயலாளர்கள், பொதுமக்களிடம் இந்த துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
அதில், புதிய கல்வி கொள்கையை மத்திய அரசு கைவிட வேண்டும். காவிரிப்படுகையில் ஹைட்ரோகார்பன் திட்டம், மீத்தேன் திட்டங்களை நடைமுறைப்படுத்தக் கூடாது.
மயிலாடுதுறையை தலைமையிடமாகக்கொண்டு தனி மாவட்டம் அறிவிக்கவேண்டும் ஆகிய மூன்று தீர்மானங்களையும் கிராம சபை நடவடிக்கை குறிப்பேட்டில் எழுதி அனைவரிடமும் கையெழுத்து பெற்று பாரத பிரதமருக்கும், தமிழக முதல்வருக்கும் அனுப்பிவைக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. துண்டுப் பிரசுரங்களை வழங்கும் பணியில் பொது தொழிலாளர்கள் சங்க அமைப்பு செயலாளர் கோடங்குடி சி.சங்கர், எருக்கூர் ஊராட்சி முன்னாள் தலைவர் முத்துகுபேரன், திமுக நகர துணைச் செயலாளர் பாஸ்கரன், மாவட்ட துணை அமைப்பாளர் செல்வமுத்துக்குமார் உள்ளிட்டோர்
ஈடுபட்டனர்.