அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், மருத்துவக் கல்வி நிறுவனங்கள் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் நீர் மற்றும் காற்று மாசு தடுப்பு விதிகளின் கீழ் அங்கீகாரம் பெற வேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் மருத்துவக் கழிவுகள் மேலாண்மை விதிப்படி, மருத்துவக் கழிவுகளை கையாளும் அனைத்து மருத்துவ நிறுவனங்களும், மாசு கட்டுப்பாடு வாரியத்துக்கு விண்ணப்பித்து, அங்கீகாரம் பெற வேண்டும். அந்த அங்கீகாரத்தின் காலாவதியின் தேதி, மாசு கட்டுப்பாடு வாரியத்தின் இசைவாணையுடன், ஒத்திசைவு செய்யப்பட்டு வழங்கப்படும்.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், புறநோயாளிகள் பிரிவுகள், கால்நடை மருத்துவமனைகள், விலங்கினங்களின் சோதனைக் கூடங்கள், நோயியல் ஆய்வகங்கள், ரத்த வங்கிகள், ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்தா, ஹோமியோபதி மருத்துவமனைகள், ஆராய்ச்சி மற்றும் மருத்துவக் கல்வி நிறுவனங்கள், சுகாதார முகாம்கள், அறுவை சிகிச்சை முகாம்கள், தடுப்பூசி முகாம்கள், ரத்ததான முகாம்கள், பள்ளிகளின் முதலுதவி அறைகள், தடயவியல் ஆய்வகங்கள் மற்றும் ஆராய்ச்சி ஆய்வகங்களுக்கு இந்த விதி பொருந்தும்.
இந்த அறிவுறுத்தலைப் பின்பற்றாத மருத்துவ நிறுவனங்களுக்கு, தேசிய பசுமைத் தீர்ப்பாய உத்தரவுப்படி இழப்பீட்டுத் தொகை விதிக்கப்படும் என ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.