பதிவுச் சான்றுகள் இல்லாமல் உணவகம் நடத்தினால் ரூ. 1 லட்சம் அபராதத்துடன் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என நாகை நகராட்சி உணவுப் பாதுகாப்பு அலுவலர் ஏ.டி. அன்பழகன்
தெரிவித்தார்.
நாகை நகர ஹோட்டல் உரிமையாளர்கள் சங்க கூட்டம், இந்திய வர்த்தக குழுமக் கட்டடத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. சங்கத் தலைவர் ஆர். முருகையன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பங்கேற்ற நகராட்சி உணவுப் பாதுகாப்பு அலுவலர் ஏ.டி. அன்பழகன் மேலு பேசியது :
உணவுப் பாதுகாப்பு தர நிர்ணயச் சட்டத்தின்படி உணவகங்கள் நடத்தும் ஒவ்வொருவரும் பதிவுச் சான்று பெறுவது அவசியம். பதிவுச் சான்றுப் பெறாமல் உணவகம் நடத்தினால் ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கவும், 6 மாத சிறை தண்டனை வழங்கவும் இச்சட்டத்தில் வழிவகை உள்ளது. நாகை நகராட்சிக்குட்பட்ட நாகை, நாகூர், தெற்கு பால்பண்ணைச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் உணவகம் வைத்திருப்பவர்கள் உடனடியாக பதிவுச் சான்றை பெற்றுவிடவேண்டும். உணவக உரிமையாளர்கள் உடனடியாக விண்ணப்பித்து பதிவுச்சான்றைப் பெற்றுவிடவேண்டும்.
விண்ணப்பிக்கும் முறைகளில் ஏதேனும் சந்தேகமிருந்தால், நாகை நீலா தெற்கு வீதியில் உள்ள நகராட்சி உணவுப் பாதுகாப்பு அலுவலரை நேரிலோஅல்லது தொலைப்பேசியிலோ தொடர்பு கொண்டு தகவல்களை பெற்று, பயனடையலாம் என்றார் அவர். கூட்டத்தில், நாகை நகர ஹோட்டல் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.