தனது தந்தையின் நினைவுதினத்தை முன்னிட்டு, திருக்குவளை அருகே உள்ள கொளப்பாடு அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு முன்னாள் கூட்டுறவு வங்கி செயலர் வியாழக்கிழமை ஊக்கத்தொகை வழங்கினார்.
கொளப்பாட்டைச் சேர்ந்தவர் நாகராஜன். கூட்டுறவு வங்கி செயலாளராக பணியாற்றி ஓய்வுபெற்ற இவர், தான் படித்து உயர்வதற்கு காரணமாக இருந்த கொளப்பாடு அரசுப் பள்ளிக்கு அவ்வப்போது நலத்திட்டங்களை செய்து வருகிறார். மேலும், ஆண்டுதோறும் தனது தந்தை ஜி. முத்துவின் நினைவு தினத்தன்று, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெறும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி அவர்களை ஊக்கப்படுத்துவது இவரது வழக்கம். அதன்படி, நிகழாண்டும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற ஜஸ்வந்த், விஷ்ணுவர்த்தினி, சந்தோஷ் ஆகிய மூன்று மாணவர்களுக்கு பரிசுத்தொகையை வழங்கி பாராட்டு தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், தலைமையாசிரியை கோ.ஜெய்குமாரி, பெற்றோர்- ஆசிரியர் கழக தலைவர் இரா.காளிதாஸ், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.