சீர்காழியில் விஜய்சுபம் பெனிபிட் பண்ட் வெள்ளி விழாவையொட்டி, வெள்ளிக்கிழமை இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
சுபம் வித்யா மந்திர், ஜெயின்சங்கம், பாரதீய ஜெயின் சங்கடன்னா, அரிமா சங்கம், புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியன இணைந்து நாகை மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்க உதவியுடன் இலவச கண் பரிசோதனை முகாம், 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நீரிழிவு நோய் கண்டறிதல் ஆகிய முகாம் கியான்சந்த் தலைமையில் நடைபெற்றது.
முகாமில் கண்புரை, கண் நீர் அழுத்த நோய், குழந்தைகளின் மாறுகண், கிட்டப்பார்வை, தூரப்பார்வை, நீரிழிவு நோயினால் ஏற்படும் விழித்திரை பாதிப்பு போன்ற பல்வேறு கண் சம்பந்தப்பட்ட குறைபாடுகளுக்கு இலவச மருத்துவ பரிசோதனை, ஆலோசனைகள் மருத்துவக் குழுவினரால் வழங்கப்பட்டது. இதில், 700-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று பரிசோதனை செய்து கொண்டனர். அறுவைச் சிகிச்சை தேவைப்பட்டவர்களுக்கு இலவச உணவு, பேருந்து வசதியுடன் புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
இதில், அரிமா சங்க மாவட்டத் தலைவர்கள் ஜெயராமன், ஹலிக்குல் ஜமால், முன்னாள் அரிமா மாவட்ட ஆளுநர்
புவனாபாலு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.