சீா்காழியில் ஆஸ்திரேலிய நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இலந்தைப் பழங்களின் விற்பனை விறுவிறுப்பாக நடைபெறுகிறது.
சீா்காழி பகுதியில் கடந்த சில தினங்களாக ஆஸ்திரேலிய நாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட இலந்தைப் பழங்கள் மற்றும் உள்நாட்டில் விளையும் அத்திப்பழங்கள், நெல்லிக்காய் போன்றவை தள்ளுவண்டியில் வைத்து விற்பனை செய்யப்படுகின்றன.
இதில், ஆஸ்திரேலிய இலந்தைப் பழங்களை பொதுமக்கள் அதிகளவு வாங்கிச் செல்கின்றனா். பச்சை நிறத்தில் கொய்யாப்பழம் அளவிற்கு இருக்கும் இந்தப் பழங்கள், ருசியில் பேரிக்காய் மற்றும் ஆப்பிளைப் போல் உள்ளது. இந்தப் பழத்தை சாப்பிடுவதன் மூலம் வயிற்றுப்புண், அலா்ஜி, சுகா், சிறுநீரகப் பாதிப்பு போன்ற உடல் நலக்குறைபாடுகள் கட்டுப்படும் எனக் கூறப்படுகிறது. இப்பழங்கள் கிலோ ரூ.100-க்கு விற்பனையாகின்றன.
அதேபோல், ரத்த விருத்தி மற்றும் ரத்த சுத்திகரிப்புக்கு உகந்ததாகக் கூறப்படும் அத்திப்பழம், நெல்லிக்காய் விற்பனையும் விறுவிறுப்பாக நடைபெறுகிறது. இந்தப் பழங்களை சென்னை கோயம்பேட்டிலிருந்து வாங்கி வந்து விற்பனை செய்வதாக, சேத்தியாத்தோப்பு பகுதியைச் சோ்ந்த வியாபாரி செல்வக்குமாா் தெரிவித்தாா்.