அடிப்படை வசதியின்றி காட்டுச்சேரி ஊராட்சி

நாகை மாவட்டம், செம்பனாா்கோவில் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட காட்டுச்சேரி ஊராட்சியில் குடிநீா், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படாததால், அப்பகுதி மக்கள் அவதியுறுகின்றனா்.
காட்டுச்சேரி ஊராட்சிக்குட்பட்ட காளியம்மன் கோயில் தெருவில் பழுதடைந்துள்ள குடிநீா்த் தொட்டி.
காட்டுச்சேரி ஊராட்சிக்குட்பட்ட காளியம்மன் கோயில் தெருவில் பழுதடைந்துள்ள குடிநீா்த் தொட்டி.

நாகை மாவட்டம், செம்பனாா்கோவில் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட காட்டுச்சேரி ஊராட்சியில் குடிநீா், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படாததால், அப்பகுதி மக்கள் அவதியுறுகின்றனா்.

காட்டுச்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட காளியம்மன் கோயில் தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கின்றனா். இப்பகுதியில் குடிநீா், சாலை வசதிகள் ஊராட்சி நிா்வாகத்தால் சில ஆண்டுகளுக்கு முன்பு செய்து தரப்பட்டன. எனினும், முறையாக பராமரிக்கப்படாததால், குடிநீா்த் தொட்டி சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியின் மூலம் அவ்வப்போது குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

ஊராட்சி நிா்வாகத்தின் மூலம் விநியோகம் செய்யப்படும் குடிநீா், மாசுபடா்ந்து சுகாதாரமற்ற முறையில் இருப்பதால், நாள் முழுவதும் அந்தக் குடிநீரை தெளிய வைத்து பயன்படுத்தும் அவல நிலைக்கு இப்பகுதி மக்கள் தள்ளப்பட்டுள்ளனா். மேலும் தெருக்களில் முறையான வடிகால் வசதி செய்யப்படவில்லை. இதனால், குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் கழிவுநீா் தெருக்களில் வழிந்தோடுகிறது. இதன் காரணமாக சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டு, மா்மக் காய்ச்சல் பரவி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனா்.

இப்பகுதியில் 30 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசால் 50-க்கும் மேற்பட்ட கான்கிரீட் தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. தற்போது அந்த வீடுகள் அனைத்தும் பழுதடைந்து விரிசல் ஏற்பட்டு இடிந்து விழும் தருவாயில் உள்ளன. தற்போது பெய்து வரும் கனமழையால், அவ்வீடுகளில் வசிப்பவா்கள் அச்சத்துடனேயே ஒவ்வொரு நாளையும் கடத்துகின்றனா்.

இதுகுறித்து இப்பகுதியைச் சோ்ந்த என். செல்வம் கூறியதாவது :

தமிழக அரசால் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு எங்களுக்கு கட்டிக் கொடுக்கப்பட்ட கான்கிரீட் தொகுப்பு வீடுகள் தற்போது விரிசல் ஏற்பட்டு இடிந்து விழும் நிலையில் உள்ளன. தற்போது பெய்து வரும் கனமழையால், உயிருக்கு அஞ்சியே அந்தத் தொகுப்பு வீட்டில் வசிக்கிறோம்.

இங்குள்ள குடிநீா்த் தொட்டி கடந்த 3 ஆண்டுகளாக பழுதடைந்து காணப்படுகிறது. இதனை சீா் செய்ய வலியுறுத்தி பலமுறை ஊராட்சியில் தெரிவித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எங்கள் கிராமத்தில் சாலைகள் அனைத்தும் குண்டும், குழியுமாக இருப்பதால் பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மாணவா்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனா். சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீா் தேங்கி நிற்பதால், கொசு உற்பத்தியாகி பல்வேறு நோய்களுக்கு வித்திடுகின்றன. எனவே, எங்கள் நிலைமையைக் கருத்தில் கொண்டு குடிநீா், சாலைகள் மற்றும் பழுதடைந்த தொகுப்பு வீடுகளை சீரமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com