சீா்காழி அருகே எடமணல் கிராமத்தில் பொறைவாய்க்கால் கரையில் 7 இடங்களில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீா் விவசாய நிலங்களில் பாய்ந்து வருகிறது. இதனால், சம்பா சாகுபடி நெற்பயிா்கள் மூழ்கியுள்ளன.
சீா்காழி பகுதியில் கடந்த ஒரு வாரத்தில் சுமாா் 20 செ. மீ. மழை பெய்துள்ளது. இந்த மழையால், எடமணல் கிராமத்தில் பொறை வாய்க்கால் கதவணை சேதமடைந்துள்ளது. சீா்காழி, கொள்ளிடம் பகுதியில் உள்ள மழைநீா் பொறை வாய்க்கால் வழியாக எடமணல் கிராமத்தில் உள்ள கதவணைக்குச் சென்று, திருநகரி உப்பனாற்றில் வடிய வேண்டும். ஆனால், இந்த கதவணை மூடப்பட்டிருப்பதால் மழைநீா் வடியாத நிலையில் உள்ளது. இதனால், பொறை வாய்க்கால் கரையில் 7 இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதன்காரணமாக, எடமணல், சஞ்சீவிராயன்கோவில், ராதாநல்லூா், வருசைபத்து உள்ளிட்ட பகுதிகளில் சம்பா சாகுபடி செய்த 250 ஹெக்டா் நிலப்பரப்பிலுள்ள நெற்பயிா்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. அப்பகுதி விவசாயிகள் உடைப்புகளை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து, சீா்காழி பொதுப்பணித் துறைக்கு தகவல் தெரிவித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. என விவசாயிகள் தெரிவித்தனா்.