மயிலாடுதுறை, வேதாரண்யத்தில் கோயிலுக்குள் புகுந்த வெள்ளம்

மயிலாடுதுறை சுற்றுவட்டாரப் பகுதியில் கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப் பெருக்கெடுத்து கரைகள் உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் மாவட்ட கூடுதல் ஆட்சியர் பிரசாந்த், மயிலாடுதுறை
மயிலாடுதுறை, வேதாரண்யத்தில் கோயிலுக்குள் புகுந்த வெள்ளம்


மயிலாடுதுறை சுற்றுவட்டாரப் பகுதியில் கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப் பெருக்கெடுத்து கரைகள் உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் மாவட்ட கூடுதல் ஆட்சியர் பிரசாந்த், மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் வீ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை நேரில் ஆய்வு செய்தனர்.
மயிலாடுதுறை பகுதியில் கடந்த 3 நாள்களாக பெய்துவரும் கனமழையின் காரணமாக காவிரி, பழவாறு, மஞ்சளாறு உள்ளிட்ட அனைத்து ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் -மணக்குடி இணைப்புப் பாலம் அருகில் ஆற்றின் கரை உடைப்பெடுத்து விளைநிலங்களில் தண்ணீர் புகுந்தது. 
இதையடுத்து, பொதுப்பணித்துறை அதிகாரிகள் தண்ணீர் வெளியேறும் பகுதியில் மணல்மூட்டைகளை அடுக்கியும், டிராக்டர் மூலம் மணலைக் கொட்டியும் கரையை பலப்படுத்தும் பணியை மேற்கொண்டனர். இப்பகுதியில் மழை பாதிப்புகளை மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் வீ.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார். 
இதேபோல், தாழஞ்சேரி அருகில் வரகடை பகுதியில் பழவாற்றங்கரையில் வெள்ளநீர் வழிந்து தெருக்களில் புகுந்ததால் அப்பகுதி வீடுகளில் வசிக்கும் சுமார் 50 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, உணவு வழங்கப்பட்டு வருகிறது. 
இப்பகுதியில், மாவட்ட கூடுதல் ஆட்சியர் பிரசாந்த், மயிலாடுதுறை வருவாய்க் கோட்டாட்சியர் இ.கண்மணி, மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் வீ.ராதாகிருஷ்ணன், மயிலாடுதுறை வட்டாட்சியர் முருகானந்தம், மயிலாடுதுறை ஒன்றிய ஆணையர் ஆர்.ஜி.இளங்கோவன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
கனமழை காணமாக மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில் திருக்குளம் நிறைந்தது. இதையடுத்து, மழைநீர் வெளியேறும் பாதையில் உள்ள தடையின் காரணமாக மழைநீர் கோயிலின் உள்புகுந்து, மாயூரநாதர் சன்னிதி மற்றும் அபயாம்பிகை சந்நிதியில் இரண்டு அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கியது. இதேபோல், திருமங்கலம் பூலோகநாதர் கோயிலிலும் மழையின் காரணமாக வெள்ளநீர் கோயிலுக்குள் புகுந்தது. இதனால் பக்தர்கள் அவதி அடைந்தனர்.
வேதாரண்யத்தில்...
வேதாரண்யம், டிச.1: வேதாரண்யம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி 131.38 மி.மீ. மழை பதிவானது.
தொடரும் மழையால் பெருக்கெடுக்கும் வெள்ள நீர் பாலங்களை மூழ்கடித்து செல்கின்றன.
 ஞாயிற்றுக்கிழமை காலையுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் வேதாரண்யத்தில் 138. 2 மி. மீ.யும், தலைஞாயிறில் 64.6 மி. மீ.யும் மழை பதிவானது. இந்த மழையால் வயல்கள் நீரில் மூழ்கியுள்ளன. நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன.
வேதாரண்யம் வேதாரண்யேசுவரர் கோயிலில் உள்வளாகம் பிரதான நுழைவுர் கூடம் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்துள்ளது. முள்ளியாறு, மானங்கொண்டான் ஆறு, அரிச்சந்திரா நதி ஆறு, அடப்பாறு ஆகியவற்றில் மழை நீர் பெருக்கெடுத்துள்ளது.
இதனால், பல்வேறு இடங்களில் தரைப்பாலங்கள் மூழ்கின.
மாவட்ட கண்காணிப்பு 
அலுவலர் ஆய்வு: வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம், தகட்டூர் ஊராட்சி கல்யாணச்சேரி}மாவடிகொல்லை பகுதியில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் முனியநாதன் மழைப் பாதிப்புகளை ஆய்வு செய்தார். 
அங்குள்ள குடியிருப்புகளை பார்வையிட்டு, மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். 
மேலும், அந்த பகுதியில் செல்லும் செல்லக்கோன் ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள தரைப் பாலத்தில் தண்ணீர் வழிந்தோடுவதை அவர் பார்வையிட்டார். 
அப்போது அந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு தார்ச் சாலை அமைக்கவேண்டுமென கோரிக்கைவிடுத்தனர். இதற்கு, ரூ.7.5 லட்சம் மதிப்பீட்டில் தார்ச் சாலை அமைக்கும் பணி, மழைக்காலம் முடிவடைந்தவுடன் தொடங்கப்படும் என அவர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் மு. இந்துமதி, நாகப்பட்டினம் வருவாய் கோட்டாட்சியர் இரா. பழனிகுமார் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com