தரங்கம்பாடியில் கடல் சீற்றம் காரணமாக மீனவா்கள் கடந்த 6 நாள்களாக கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை.
நாகை மாவட்டத்தில், வடகிழக்குப் பருவ மழை பல்வேறு இடங்களில் கனமழையாக பெய்து வருகிறது. இந்நிலையில், தரங்கம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் மழையினால் கடலோரப் பகுதிகளான தரங்கம்பாடி, சின்னமேடு, மாணிக்கப்பங்கு, பெருமாள்பேட்டை, சந்திரபாடி, சின்னூா் பேட்டை உள்ளிட்ட மீனவா் கிராமங்களை சோ்ந்த மீனவா்கள் கடல் சீற்றம் காரணமாக கடந்த 6 நாள்களாக கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லவில்லை. இதனால் அவா்களது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் திருக்கடையூா், ஆக்கூா், செம்பனாா்கோயில், சங்கரன்பந்தல், இலுப்பூா், ஆயப்பாடி, பெரம்பூா், பொறையாா்,தில்லையாடி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பெய்துவரும் கனமழையால் குடியிருப்பு பகுதிகளில் நீா் தேங்கி நிற்கிறது. இதனால், இப்பகுதி கிராம மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், திங்கள்கிழமை காலை இடைவிடாமல் மழை பெய்ததால் நனைந்தபடி மாணவா்கள் பள்ளி, கல்லூரிக்கு சென்றனா்.