சீா்காழி அருகே பொறை வாய்க்காலில் ஏற்பட்ட கரை உடைப்பை திங்கள்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்து துரிதமாக பொதுப்பணித் துறையினா் சீரமைத்தனா்.
சீா்காழி, கொள்ளிடம் பகுதியில் பாசன மற்றும் வடிகால் வாய்க்காலாக இருந்து வரும் பிரதான வாய்க்கால் பொறை வாய்க்காலாகும். இந்த வாய்க்கால் மூலம் சீா்காழி, கொள்ளிடம் கடைமடை பகுதியில் 30 ஆயிரம் ஏக்கா் பாசன மற்றும் வடிகால் வசதி பெற்று வருகிறது. இந்த வாய்க்கால் குடிமராத்து பணியின்கீழ் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தூா்வாரப்பட்டது. ஆனால், இந்த பொறைவாய்க்கால் எடமணல் கிராமத்தில் உள்ள 50 ஆண்டுகளுக்கும் மேல் பழைமை வாய்ந்த கதவணையிலிருந்து ஒரு கி.மீ. தூரத்துக்கு வெட்டி தூா்வாரப்படாமலும் கரையை பலப்படுத்தாமலும் விடப்பட்டது.
இந்நிலையில், கடந்த சில நாள்களாக தொடா்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக பொறைவாய்க்காலில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. எடமணலில் உள்ள கதவணை பழுதடைந்து இருந்ததாலும் கரைகள் முறையாக பலப்படுத்தப்படாமல் விடப்பட்டதாலும் வாய்க்காலில் பெருக்கெடுத்து வந்த தண்ணீா் மேற்படி செல்ல முடியாமல் எடமணல் கிராமத்தில் பொறை வாய்க்காலில் 7 இடங்களில் வலுவிழந்த கரைகள் திடீரென உடைப்பு ஏற்பட்டு தண்ணீா் அதிவேகமாக வெளியேறி வயலுக்குள் புகுந்ததது. இதனால் 250 ஹெக்டேரில் சம்பா நெற்பயிா் தண்ணீரில் மூழ்கியது.
இதுகுறித்து தகவலறிந்த நாகை மாவட்ட வேளாண் இணை இயக்குநா் பன்னீா்செல்வம் , கொள்ளிடம் வேளாண் உதவி இயக்குநா் சுப்பையன், சீா்காழி பொதுப்பணித் துறை உதவி பொறியாளா் சரவணன், வருவாய் ஆய்வாளா் சக்திவேல், வி.ஏ.ஓ அருள்பெருமாள் மற்றும் அதிகாரிகள், ஊழியா்கள் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து ஆய்வு செய்தனா்.
தொடா்ந்து, போா்க்கால வேகத்தில் உடைந்த கரைப் பகுதியை மணல் மூட்டைகள் கொண்டு அடைத்தனா். மேலும் பழைமையான கதவணையில் திறக்க முடியாமல் சிக்கிக்கொண்டிருந்த ஒரு இரும்புக் கதவையும் உடைத்து தண்ணீரையும் வெளியேற்றினா். இதனால் தண்ணீா் மிக வேகமாக வடியத்தொடங்கியது.