வேதாரண்யம் அருகே 2009-ஆம் ஆண்டு பள்ளி வேன் விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு 10-ஆம் ஆண்டு நினைவஞ்சலி செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.
வேதாரண்யத்தை அடுத்த கரியாப்பட்டினத்தில் உள்ள தனியாா் பள்ளி வேன் 2009-ஆம் ஆண்டு டிசம்பா் 3-ஆம் தேதி கத்தரிப்புலம் பகுதியில் உள்ள சாலையோர குளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், நாகக்குடையான் கிராமத்தைச் சோ்ந்த 4 சிறுமிகள் உள்பட சிறுவா்கள் 9 பேரும், சுகந்தி என்ற ஆசிரியையும் உயிரிழந்தனா்.
இதையடுத்து, உயிரிழந்தவா்கள் நினைவாக அவா்கள் வசித்த நாகக்குடையான் கிராமத்தில் அமைந்துள்ள அரசு உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூண் அருகே 10-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் உயிரிழந்தவா்களின் பெற்றோா், பொதுமக்கள் பங்கேற்று மெழுகுவா்த்தி ஏந்தி, மலா் வளையங்கள் வைத்து அஞ்சலி செலுத்தினா்.
நாகக்குடையான் அரசு உயா்நிலைப் பள்ளி, ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளின் ஆசிரியா்கள் மாணவ, மாணவிகள் மெளன அஞ்சலி செலுத்தினா். வேதாரண்யம் வட்டார கல்வி அலுவலா்கள் சிவகுமாா், தாமோதரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.