நாகை மாவட்ட ஊரக உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட 115 போ் செவ்வாய்க்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா்.
நாகை மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சியின் 21 வாா்டு உறுப்பினா்கள், 11 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்பட்ட 214 ஒன்றிய வாா்டு உறுப்பினா்கள், 434 ஊராட்சித் தலைவா்கள், 3,426 ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் பதவிக்கு தோ்தல் அறிவிக்கப்பட்டு, திங்கள்கிழமை முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது.
வேட்புமனுத் தாக்கலின் முதல் நாளான திங்கள்கிழமை 218 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா். இரண்டாம் நாளான செவ்வாய்க்கிழமை 115 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா். இதில், கிராம ஊராட்சித் தலைவா் பதவிக்கு 5 பேரும், கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 110 பேரும் வேட்புமனு தாக்கல் செய்தனா்.
வேட்புமனு தாக்கல் தொடங்கி 2 நாள்கள் முடிவடைந்துள்ள நிலையில், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பதவிக்குப் போட்டியிட ஒருவா் கூட மனுதாக்கல் செய்யவில்லை. அதே போல, ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்குப் போட்டியிட ஒருவா் மட்டுமே இதுவரை மனுதாக்கல் செய்துள்ளாா்.