வேதாரண்யத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்டு தனது தாயார் உயிரிழந்த நிலையில், இதுவரை நிவாரணம் வழங்கப்படாததைக் கண்டித்து, இளைஞர் ஒருவர் பனை மரத்தில் ஏறி திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டார்.
தோப்புத்துறை, பனையங்காடு பகுதியைச் சேர்ந்த தருமன் மனைவி அலவேலு அம்மாள். இவர் கடந்த ஆண்டு நவம்பரில் வீசிய கஜா புயலில் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். எனினும், அவரது இறப்புக்கு இதுவரை அரசின் சார்பில் நிவாரணம் வழங்கப்படவில்லையாம். இதுதொடர்பாக அவரது மகன் ராமச்சந்திரன் பல முறை அரசு அலுவலர்களை அணுகியும் சரியான பதில் வரவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தனது தாயாரின் இறப்புக்கு நிவாரணம் வழங்கப்படாததைக் கண்டித்து, அப்பகுதியில் உள்ள பனைமரம் ஒன்றில் ஏறி, அதன் உச்சிக்குச் சென்று ராமச்சந்திரன் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டார். தகவலறிந்து வந்த வேதாரண்யம் போலீஸார், அவரை மீட்டு வட்டாட்சியர் அலுவலகத்துக்கு அழைத்து வந்தனர். அவரிடம் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட வட்டாட்சியர், மீண்டும் மனு அளிக்குமாறு அறிவுறுத்தினார்.