சீர்காழியில் கண்காணிப்பு கேமராக்கள் கட்டுப்பாட்டு அறையை நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செ. விஜயக்குமார் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.
சீர்காழியில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தவும், குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையிலும், சட்டம் ஒழுங்கை தீவிரமாகக் கண்காணிக்கவும் சீர்காழி காவல் உட்கோட்டம் சார்பில் சட்டநாதபுரம் ரவுண்டானா, தென்பாதி, புதிய பேருந்து நிலையம், கச்சேரி சாலை, அரசு மருத்துவமனை சாலை, பிடாரி வடக்கு வீதி, பழைய பேருந்து நிலையம், மணிக் கூண்டு, கடைவீதி, கொள்ளிடமுக்கூட்டு, பிடாரி வடக்கு வீதி, ரயில்வே சாலை, புறவழிச் சாலை, விளந்திடசமுத்திரம் சாலை, ஈசானியத் தெரு உள்ளிட்ட 48 இடங்களில் சாலை சந்திப்புகளில் நவீன கண்காணிப்பு கேமராக்கள்
பொருத்தப்பட்டுள்ளன.
இதன் கட்டுப்பாட்டு அறை சீர்காழி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தனி அறையில் அமைக்கப்பட்டுள்ளது. கேமராக்களின் பதிவுகள் இந்த கட்டுப்பாட்டு அறையில் உள்ள எல்.இ.டி. திரைகளின் மூலம் கண்காணிக்கப்படுகிறது. இதற்காக 24 மணி நேரமும் பணியில் இருக்கும்படி சுழற்சி முறையில் 3 காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சீர்காழி காவல் நிலையத்துக்கு வருகைதந்த நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செ.விஜயகுமார், கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்டு, ஆய்வு செய்தார். அப்போது அவர், சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் வகையில், போலீஸார் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபடவேண்டும் என அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது, சீர்காழி காவல் ஆய்வாளர் சிங்காரவேலு
உடனிருந்தார்.