தமிழகம் முழுவதும் காதலர் தினம் என்ற பெயரில் பொது இடங்களில் ஆபாசமாக நடைபெறும் கொண்டாட்டங்களுக்கு தமிழக முதல்வர் தடை விதிக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் ஜெ. சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை:
காதலர் தினம் என்ற பெயரில் பிப்ரவரி 14 -ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள பூங்காக்கள், சுற்றுலாத் தலங்கள், கோயில்கள் உள்ளிட்ட பொது இடங்களில் ஆபாச கொண்டாட்டங்களில் ஈடுபடுவோரை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேபோல், நட்சத்திர விடுதிகளில் நடைபெறும் ஆபாச ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்க வேண்டும்.
தமிழகத்தில், பொதுமக்களுக்கும், பொது அமைதிக்கும் குந்தகம் ஏற்படுத்தும் வகையில் நடைபெறும் காதலர் தினக் கொண்டாட்டங்களுக்கு தமிழக முதல்வர் தடை விதிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.