கீழ்வேளூர் அருகே கச்சனம் - கீழ்வேளூர் சாலையோரத்தில் உள்ள பள்ளங்களை சீரமைக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.
கீழ்வேளூர் அருகில் வடக்காலத்தூர் இலுப்பூர்சத்திரம் சாலையோரத்தில் இருந்த மரங்கள் கஜா புயலில் விழுந்து சேதமடைந்தன. விழுந்த மரங்கள் சாலையின் மிக அருகில் இருந்ததால் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இப்பள்ளத்தில், அவ்வழியே இருசக்கர வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் செல்வோர் எதிர்பாராமல் விழுந்து பாதிக்கப்படுகின்றனர். கீழ்வேளூர் அருகே ஓரிடத்தில் மரம் விழுந்து ஏற்பட்டுள்ள பள்ளத்தில் அண்மையில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் விழுந்து பலத்த காயமடைந்து உயிரிழந்தார். இதையடுத்து, சாலையோர பள்ளங்களை சீரமைக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியது: புயலால் பாதிக்கப்பட்ட சாலைகளை சீரமைக்க கோரி பலமுறை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இப்பகுதியில் தற்போது நடைபெறும் சாலையோர பள்ளம் சீரமைப்பு பணியை முன்கூட்டியே செய்திருந்தால் விபத்தை தடுத்து உயிரிழப்பை தவிர்த்திருக்கலாம் என்றனர். எனவே, அரசு இதுபோன்ற பொதுமக்களின் கோரிக்கைகளை உடனடியாக ஏற்று தக்க சமயத்தில் அதற்கான நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே விபத்துகளை தவிர்த்து பொதுமக்களை பாதுகாக்க முடியும் என்பதை சம்பந்தப்பட்ட துறையினர் அறிந்து செயல்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.