வேதாரண்யம் அருகே கோயிலின் பின்பக்கக் கதவை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள், உண்டியலைத் திருடிச் சென்றது புதன்கிழமை தெரியவந்தது.
தாணிக்கோட்டகம் பகுதியில் பிரசித்திப் பெற்ற ஸ்ரீ கோடியம்மன்- முனியதம்பிரான் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் பின்பக்கக் கதவு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, பூசாரி பரமசிவம் உள்ளே சென்று பார்த்தபோது, கோயிலுக்குள் வைக்கப்பட்டிருந்த சுமார் 4 அடி உயரமுள்ள உலோகத்தாலான உண்டியல் மாயமானது தெரியவந்தது.
வழக்கமாக இந்த கோயிலின் ஆண்டுப் பெருவிழாவின்போது, அதாவது ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே உண்டியல் திறக்கப்பட்டு, அதில் இருக்கும் ரூபாய் மற்றும் காணிக்கை பொருள்கள் எண்ணப்படுவது வழக்கம்.
உண்டியலைத் திருடிச் சென்ற மர்ம நபர்கள், கோயிலினுள் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவையும் துண்டித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து வாய்மேடு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.