சீர்காழியில் உள்ள ஆதிஇராகு தலமான நாகேஸ்வரமுடையார் கோயிலில் புதன்கிழமை ராகு பெயர்ச்சி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
சீர்காழி நாகேஸ்வரமுடையார் கோயில் நவகிரகங்களில் சாயா கிரகங்களான ராகுவும், கேதுவும் ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பின்னோக்கி பெயர்ச்சியடைவார்கள். அவ்வாறு ராகு பகவான் கடக ராசியிலிருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சியடைந்தார்.
அதன்படி, சீர்காழியில் ஆதி ராகு தலமான பொன்னாகவல்லி அம்மன் உடனாகிய நாகேஸ்வரமுடையார் இக்கோயிலில் தனது நட்பு கிரகமான சனீஸ்வர பகவான் தம்பதியுடன் சேர்ந்து ஒரே சன்னிதியில் அருள்பாலிக்கிறார்.
இங்கு, ராகு பெயர்ச்சியையொட்டி, செவ்வாய்கிழமை விக்னேஸ்வரபூஜைகளுடன் பரிகார ஹோமம் தொடங்கியது. தொடர்ந்து, பூர்ணாஹூதி, தீபாராதனை நடைபெற்றது.
பின்னர், புதன்கிழமை பிற்பகல் அமிர்த ராகு பகவானுக்கு மஞ்சள், திரவியபொடி, இளநீர், தேன், பன்னீர், பஞ்சாமிர்தம், பால், தயிர், சந்தனம் முதலான பொருள்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
தொடர்ந்து 2.02மணிக்கு பெயர்ச்சி மகா தீபாராதனை நடைபெற்றது.