திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாள் கோயிலில் வியாழக்கிழமை தங்க கருட சேவை வீதியுலா புறப்பாடு நடைபெற்றது.
திருவரங்கம் மேலை வீடு எனவும், திருவேங்கடம் வடக்கு வீடு எனவும், திருமாலிருஞ்சோலை தெற்கு வீடு எனவும், திருக்கண்ணபுரம் கீழை வீடு எனவும் போற்றப்படுகிறது. ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமையுடைய திருமருகல் அருகே திருக்கண்ணபுரத்தில் உள்ள அருள்மிகு சௌரிராஜப் பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் மாசி மகப்பெருவிழா 15 நாள்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டு விழா பிப்ரவரி 11-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை தொடர்ந்து வியாழக்கிழமை சுவாமி தங்க கருட சேவை வீதியுலா புறப்பாடு நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பிப்ரவரி 17-ஆம் தேதி தேரோட்டமும், பிப்ரவரி 19-ஆம் தேதி திருப்பட்டினத்தில் சமுத்திர தீர்த்தவாரியும், பிப்ரவரி 24-ஆம் தேதி தெப்ப திருவிழாவும் நடைபெறுகிறது.