திருக்கடையூர் அருகே திருமெய்ஞானம் கிராமத்தில் தனியார் மணல் குவாரியைத் தடை செய்யக் கோரி, 2 நாள்களாக நடைபெற்று வந்த உண்ணாவிரதப் போராட்டம் சனிக்கிழமை நிறைவுபெற்றது.
திருமெய்ஞானம் கிராமத்தில் செயல்பட்டுவந்த தனியார் மணல் குவாரியால் குடிநீர் உப்புநீராக மாறுகின்ற சூழல் உருவானது. எனவே, மணல் குவாரிக்கு தடை விதிக்கக் கோரி, அப்பகுதி மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து, தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் அ. சுந்தரம் தலைமையில் சனிக்கிழமை பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில், உடன்பாடு ஏற்பட்டதையடுத்து 2 நாள்களாக நடைபெற்று வந்த உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது. பேச்சுவார்த்தையில் பொறையாறு போலீஸார் மற்றும் திருமெய்ஞானம் கிராம பொதுநலச் சங்கத் தலைவர் முனுசாமி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.