நாகை மாவட்டம், தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டம் தொடர்ந்து நடத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தரங்கம்பாடி வட்டத்துக்குள்பட்ட பொறையார், ஆயர்பாடி , இலுப்பூர், சங்கரன்பந்தல், நல்லாடை, பெரம்பூர், திருவிளையாட்டம், மேமாத்தூர் , நெடுவாசல், செம்பனார்கோவில், கீழையூர் , ஆக்கூர், மாமாகுடி, திருக்கடையூர், அனந்தமங்கலம், உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில், வட்டாட்சியர் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்று வந்தது. இதில், சம்பந்தப்பட்ட பகுதி விவசாயிகள் பங்கேற்று விவசாயம், சாலை வசதி , மின் வசதி மற்றும் குடிநீர் சம்பந்தமான புகார்களை தெரிவித்து வந்தனர் . இதனடிப்படையில், அதிகாரிகளின் கவனத்தில் அந்தந்த பகுதிகளில் பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களாக விவசாய குறைதீர் கூட்டம் நடைபெறவில்லை. இதனால் கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்கள் பகுதிகளில் உள்ள குறைகளை தெரிவிக்க முடியாமல் அதிகாரிகளை தேடி அலையும் நிலை உள்ளது. விவசாயிகளின் நலன் கருதி வட்டாட்சியர் அலுவலகத்தில் வழக்கம்போல் மாதந்தோறும் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை நடத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.