தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில், இளம் விஞ்ஞானி விருதுபெற்ற நாகை பள்ளி மாணவியரை மாவட்ட ஆட்சியர் சீ.சுரேஷ்குமார் பாராட்டினார்.
தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு-2018, ஒடிஸா தலைநகர் புவனேஸ்வரத்தில் டிச. 2-ஆம் தேதி முதல் டிச. 31-ஆம் தேதி வரை நடைபெற்றது.
இதில், நாகையை அடுத்த மஞ்சக்கொல்லை உதவி பெறும் நடுநிலைப்பள்ளியைச் சேர்ந்த 8-ஆம் வகுப்பு மாணவியர் எ. இனிதா, சு. ஐஸ்வர்யா ஆகியோர் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்து, இளம் விஞ்ஞானி விருது பெற்றனர்.
இளம் விஞ்ஞானி விருது பெற்ற மாணவியர் எ. இனிதா, சு. ஐஸ்வர்யா ஆகியோரையும், மாநில அளவிலான துளிர் திறனறிதல் தேர்வில் முதல் 10 பேரில் ஒருவராகத் தேர்வு பெற்ற நாகை சின்மயா வித்யாலயா பள்ளி மாணவர் மு. மகேஸ்வரன் ஆகியோரையும் புதன்கிழமை மாலை மாவட்ட ஆட்சியரகத்துக்கு அழைத்து, ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் பாராட்டி, வாழ்த்தினார்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செ. அமுதா, அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் முருகப்பன், அறிவியல் இயக்க மாவட்டத் துணைத் தலைவர்கள் இரா. பாலு, நா. எழிலரசன், மாவட்டச் செயலாளர் காட்சன், தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி ஆகியோர் உடனிருந்தனர்.