நாகையில் குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசுப் பணம் வழங்க, ஒரு நியாயவிலைக் கடையில் ரொக்கப் பணம் இல்லாததைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.
தமிழக அரசு உத்தரவுப்படி, கடந்த திங்கள்கிழமை முதல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும், குடும்ப அட்டைதாரர்களுக்கு சர்க்கரை, அரிசி, ஏலக்காய், முந்திரி, கரும்புத் துண்டு உள்ளிட்ட பொருள்களுடன், ரூ. 1,000 ரொக்கப் பணம் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதையொட்டி, நியாயவிலைக் கடைகளில் திரளான குடும்ப அட்டைதாரர்கள் குழுமி வருவதால், அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கப் பணத்தைப் பெற வேண்டிய நிலை உள்ளது.
இந்த நிலையில், நாகை வ.உ.சி தெருவில் உள்ள நெ. 8 நியாயவிலைக் கடையில், பொங்கல் பரிசுத் தொகுப்புடன் வழங்க ரொக்கப் பணம் கையிருப்பு இல்லாத நிலை வெள்ளிக்கிழமை காலை ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் தனியார் திரையரங்கம் அருகே, நாகை பப்ளிக் ஆபீஸ் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
நாகை வட்டாட்சியர் இளங்கோவன், வெளிப்பாளையம் காவல் ஆய்வாளர் சிவப்பிரகாசம் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.
பணம் கிடைக்க தாமதமாகும் என்பதால், வருகை தந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கி, டோக்கன் பெற்றவர்களுக்கு சனிக்கிழமை காலை ரொக்கப் பணத்துடன் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என உறுதியளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.