குத்தாலம் வட்டம், கோமல் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர் 433 பேருக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில், பூம்புகார் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் எஸ். பவுன்ராஜ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு, 433 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். தலைமையாசிரியர் சி. பிச்சைமணி தலைமை வகித்தார். நடிப்பிசைப் புலவர் கே.ஆர். ராமசாமி, கூட்டுறவு சர்க்கரை ஆலைத் தலைவர் என். தமிழரசன், மயிலாடுதுறை மாவட்டக் கல்வி அலுவலர் கி. குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதுகலை தமிழாசிரியர் என். சகில்ராஜ் வரவேற்றார். பெற்றோர்- ஆசிரியர் கழக நிர்வாகிகள், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கத் தலைவர்கள் சந்திரபோஸ் வர்மா, இளங்கோவன், ஊராட்சிமன்ற முன்னாள் தலைவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முதுகலை ஆசிரியர் ஜி. ராமச்சந்திரன் நன்றி கூறினார்.
இதேபோல், திருவாவடுதுறை, வேழமுறித்தான்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை எம்எல்ஏ எஸ். பவுன்ராஜ் வழங்கினார்.