வைத்தீஸ்வரன்கோயிலில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை நடைபெற்று வருவதை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து, வைத்தீஸ்வரன்கோயில் பாஜக ஒன்றிய பிரசார அணித் தலைவர் ராஜேந்திரன் நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமாருக்கு அனுப்பியுள்ள புகார் மனு விவரம்: வைத்தீஸ்வரன்கோயிலில் உள்ள பிரசித்திப் பெற்ற வைத்தியநாத சுவாமி கோயில் நவகிரக செவ்வாய் தலமாக விளங்குகிறது. இங்கு நாள்தோறும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் வைத்தீஸ்வரன்கோயில் கடைவீதிகளில் பொருள்கள், அர்ச்சனைதட்டுகள் வாங்கும்போது அதை பிளாஸ்டிக் பைக்குள் வைத்து கொடுக்கின்றனர். அரசால் தடை செய்யப்பட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருள்கள் வைத்தீஸ்வரன்கோயில் பகுதி கடைகளில் தாராளமாக கிடைக்கிறது. பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ஒரு சில கடைகளில் மட்டும் ஆய்வு செய்யப்பட்டு பிளாஸ்டிக் பைகள் எடுத்து செல்லப்பட்டன. பாரபட்சமாக சில கடைகளில் ஆய்வு நடத்தாமல் விட்டுவிட்டனர். எனவே, இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.