நாகை அருகே, மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழந்தார். இருவர் காயமடைந்தனர்.
தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்கள், செவ்வாய்க்கிழமை வடக்குப் பொய்கைநல்லூர் கிராமத்தில் மின்இணைப்புக் கொடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வடக்குப்பொய்கநைல்லூர் சுனாமி குடியிருப்பு சிவன்கோயில் தெருவைச் சேர்ந்த சரவணன் (20), மு. ராமலிங்கம் (38), வீ. செல்லப்பன் (45) ஆகிய மூவரை மின் இணைப்புக் கொடுக்கும் பணிக்கு பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. அப்போது, மின்சாரம் பாய்ந்ததில் சரவணன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். ராமலிங்கம், செல்லப்பன் ஆகியோர் காயமடைந்தனர். தகவலறிந்த நாகை போலீஸார் நிகழ்விடத்துக்குச் சென்று உயிரிழந்த சரவணனின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த ராமலிங்கம், செல்லப்பன் ஆகியோர் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
உறவினர்கள் சாலை மறியல்: இச்சம்பவத்தைத் தொடர்ந்து, மருத்துவமனை வளாகத்தில் அக்கிராம மக்கள் மற்றும் உறவினர்கள், மின் விபத்துக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து, போலீஸார் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது.