திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகேயுள்ள ஜாம்பவானோடையில் உள்ள சேக்தாவூது ஆண்டவர் தர்கா பெரியகந்தூரி விழாவையொட்டி, சந்தனக்கூடு விழா வியாழக்கிழமை அதிகாலை நடைபெற்றது.
நிகழாண்டின் 717-ஆவது பெரிய கந்தூரி விழா ஜன. 7-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் சிறப்பு வழிபாடுகள் மற்றும் பிரார்த்தனைகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான புனித சந்தனகூடு ஊர்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது. முன்னதாக, புதன்கிழமை இரவு 10.30 மணிக்கு தர்கா முதன்மை அறங்காவலர் எஸ்.எஸ். பாக்கர் அலி சாகிப் இல்லத்தில் வைக்கப்பட்ட சந்தனங்கள் நிரப்பிய குடங்களை தர்காவுக்கு எடுத்து செல்லும் நிகழ்ச்சி சிறப்பு பிரார்த்தனையுடன் நடைபெற்றது.
தொடர்ந்து நள்ளிரவு இரவு 2.30 மணிக்கு தர்கா முதன்மை அறங்காவலர் எஸ்.எஸ்.பாக்கர் அலி சாகிப் தலைமையில் டிரஸ்டிகள் புனித சந்தன குடம் தலையில் சுமந்து வந்து கண்ணாடிகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூட்டில் வைத்து அதிர்வேட்டுகள், வாணவேடிக்கை நாகசுர இன்னிசையுடன் சந்தனக்கூடு ஊர்வலம் தொடங்கியது. சந்தனக்கூடு ஊர்வலம் அடக்கஸ்தலம் சென்று பின்னர் ஆற்றங்கரை பாவா தர்கா, அம்மா தர்ஹா பகுதிக்கு சென்று மீண்டும் தர்காவை மூன்று முறை வலம் வந்தது. அப்போது, பக்தர்கள் பூக்களை சந்தனக்கூடு மீது வீசி தங்களது வேண்டுதலுக்காக பிரார்த்தனை செய்தனர்.
பின்னர் அதிகாலை 5 மணிக்கு சாந்தன கூட்டிலிருந்து சந்தன குடங்கள் தர்காவுக்கு எடுத்து வரப்பட்டு ஷேக்தாவூது ஆண்டவர் சமாதிக்கு புனித சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது. சந்தனக்கூடு விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.