திருவெண்காடு கோயிலில் நாயன்மார்களுக்கு சிறப்பு வழிபாடு
By DIN | Published On : 01st July 2019 07:10 AM | Last Updated : 01st July 2019 07:10 AM | அ+அ அ- |

திருவெண்காடு பிரம்மவித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேசுவரர் கோயிலில் பிரதோஷத்தையொட்டி நாயன்மார்களுக்கு சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர் மற்றும் மாணிக்கவாசகர் உள்ளிட்ட 63 நாயன்மார்கள் சிவனைப் போற்றி பாடல்கள் பாடியுள்ளனர். இந்த 63 நாயன்மார்களையும் வழிபாடு செய்தால், சிவன் அருள் கிட்டுவதுடன், வாழ்வில் வளம் பெருகும் என்பது ஐதீகம்.
இத்தகைய சிறப்புபெற்ற 63 நாயன்மார்களும் திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயிலில் தனி சன்னிதியில் அருள்பாலிக்கின்றனர். ஆனி மாத பிரதோஷத்தையொட்டி 63 நாயன்மார்களுக்கும் பால், வாசனைத் திரவியங்கள் மற்றம் இளநீர் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில், கோயில் நிர்வாக அதிகாரி முருகன், நாயன்மார்கள் வழிபாட்டு மன்றத் தலைவர் பாபு, துணைத் தலைவர் சங்கர், இணைச் செயலாளர்கள் அம்பேத், ராஜேந்திரன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.