பூட்டியே கிடக்கும் காவல் உதவி மையம்
சீர்காழி பேருந்து நிலையத்தில் காவலர்கள் இல்லாததால், காவல் உதவி மையம் பூட்டியே கிடக்கிறது. இதனால், பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில் காலை, மாலை வேளைகளில் பயணிகள் கூட்டம் மிகுந்து காணப்படும். இதைப் பயன்படுத்தி சில நேரங்களில் திருட்டுச் சம்பவங்கள் நடைபெறுவது உண்டு. இதைத் தடுக்க காவல் உதவி மையம் ஏற்படுத்தப்பட்டது. இந்த மையத்தில் ஓர் உதவி ஆய்வாளர் மற்றும் 2 காவலர்கள் சுழற்சி முறையில் பணிபுரிவர். இந்த காவலர்கள் பேருந்து நிலையத்தை வலம் வந்து பயணிகளிடையே நடைபெறும் திருட்டு, சண்டை சச்சரவுகள் ஆகியவற்றை கண்காணித்து வந்தனர்.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த காவலர் உதவி மையம் போலீஸ் பற்றாக்குறையால் பூட்டப்பட்டுள்ளது. இதனால், பயணிகளின் உடைமைகள், நகைகள் சில நேரங்களில் திருடப்படுகின்றன. காலை, மாலை வேளைகளில் பேருந்துக்காக காத்திருக்கும் மாணவியருக்கு போதிய பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்படுகிறது. பேருந்து நிலையம் எதிரிலேயே சீர்காழி காவல் நிலையம் இருப்பதால், இங்கு போலீஸார் பணியமர்த்தப்படாமல் இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஆயினும், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் காலை, மாலை வேளைகளில் மட்டுமாவது பேருந்து நிலையத்தில் உள்ள காவலர் உதவி மையத்தைத் திறந்து வைத்து காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.