நாகை மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் 262 மனுக்களை அளித்தனர்.
நாகை மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம், மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தலைமை வகித்து, பணிக்காலத்தில் இறந்த கிராம உதவியாளர் ஒருவரின் வாரிசுதாரருக்குக் கருணை அடிப்படையில் இளநிலை வருவாய் அலுவலர் பணிக்கான பணி நியமன ஆணை, மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் தேசிய அறக்கட்டளை மூலம் 25 பேருக்கு மாற்றுத் திறனாளிகளுக்கான சட்டப்பூர்வ பாதுகாவலர் நியமனச் சான்றுகள் ஆகியவற்றை வழங்கினார்.
இந்தக் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், குறைகளுக்குத் தீர்வுக் கோரியும் பொதுமக்களிடமிருந்து 247 மனுக்களும், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டத்திலிருந்து 15 மனுக்களும் பெறப்பட்டுத் தொடர்புடையத் துறைகளின் நடவடிக்கைகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டன.
மாவட்ட வருவாய் அலுவலர் மு. இந்துமதி, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் எம். வேலுமணி மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.