கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகை மாவட்டத்தில் 8 இடங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இணையதள அடங்கல் மற்றும் கணினி வழிச்சான்று வழங்கும் பணிக்குத் தேவையானஅடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும், காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களில் ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர்களை பணியமர்த்துவதற்கான அரசு உத்தரவை திரும்பப்பெறவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகை, வேதாரண்யம், திருக்குவளை, கீழ்வேளூர், மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி, குத்தாலம் ஆகிய 8 இடங்களில் இந்த ஆர்ப்பாட்டம்
நடைபெற்றது.
நாகை: நாகை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க நாகை வட்டத் தலைவர் மாரியப்பன் தலைமை வகித்தார்.40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
கீழ்வேளூர்: கீழ்வேளூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு வட்டத் தலைவர் குமரவடிவேல் தலைமை வகித்தார். கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்துகொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
இதேபோல், மயிலாடுதுறையில் வட்டத் தலைவர் டி.திருமலைச்சங்கு, வேதாரண்யத்தில் வட்டத் தலைவர் ரெங்கநாதன், திருக்குவளையில் வட்டத் தலைவர்முரளி, தரங்கம்பாடியில் வட்டத் தலைவர்பன்னீர்செல்வம், ஆகியோரது தலைமையில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குத்தாலம், சீர்காழி, வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பாக கிராம நிர்வாக அலுவலர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.