மாநில அரசு ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ. 9 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என நாகை மாவட்ட ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
நாகை மாவட்ட ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க செயற்குழுக் கூட்டம், நாகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆ. கலியமூர்த்தி தலைமை வகித்தார்.
சங்கத்தின் தலைமை நிலையச் செயலாளர் எம். கோபால்சாமி, மாவட்டப் பொருளாளர் எம்.ஜி. சிங்காரவேலு, மாவட்ட மற்றும் வட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில், 3 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது, ஓய்வூதியர்களுக்கான மருத்துவப்படியை ரூ. 1,000-ஆக உயர்த்தி வழங்கக் கோருவது, குடும்ப ஓய்வூதியர்களுக்கு பண்டிகை கால முன்பணமாக ரூ. 2 ஆயிரம் வழங்கக் கோருவது, மாநில அரசு ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ. 9 ஆயிரமாக உயர்த்தி வழங்க வலியுறுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சங்க மாவட்டச் செயலாளர் ஏ. ரெத்தினம் வரவேற்றார். துணைத் தலைவர் வி.எஸ். சோமசுந்தரம் நன்றி கூறினார்.