இலவச தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம்
சமூக நலத் துறை மூலம் இலவச தையல் இயந்திரங்கள் பெறத் தகுதியானோர் விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சமூக நலத் துறை மூலம் செயல்படுத்தப்படும் சத்தியவாணிமுத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ், இலவச தையல் இயந்திரங்களைப் பெற, விதவைப் பெண்கள், கணவரால் கைவிடப்பட்டவர்கள், ஆதரவற்றோர், மாற்றுத் திறனாளிகள், நலிவுற்ற மகளிர் ஆகியோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியானவர்கள், வட்டாட்சியரிடமிருந்து பெற்ற ஆண்டு குடும்ப வருமான அசல் சான்று (ரூ. 72 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும்), குடும்ப அட்டை, குறைந்தபட்சம் 6 மாத காலம் தையல் பயிற்சி பெற்றதற்கான சான்று, வயதுச் சான்று (20 முதல் 40 வரை), ஆதார் அட்டை, முன்னுரிமை சான்று ஆகியவற்றின் நகல்களுடன், 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை இணைத்து நாகை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் ஜூலை 19-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.