நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் தகராறை சமாதானப்படுத்தச் சென்றவர் கொல்லப்பட்ட வழக்கில், 2 இளைஞர்களுக்குத் தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, நாகை மாவட்ட அமர்வு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்துள்ளது.
மயிலாடுதுறை அருகே உள்ள சேத்திரபாலபுரம் பகுதியைச் சேர்ந்த ராமநாதன் மகன் முருகன்(44). கடந்த 2012-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21-ஆம் தேதி மாலை முருகன் மற்றும் அவரது நண்பர்கள் சிலர் மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் இருந்த அரசு மதுபானக் கடையில் மது அருந்தியுள்ளனர்.
அப்போது, மயிலாடுதுறை கூறைநாடு, கவரத்தெருவைச் சேர்ந்த கா. சக்திவேல்(37), வாணிபத் தெருவைச் சேர்ந்த சேட்டு என்ற எம். புனிஅமீன்(35) ஆகியோருக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. முருகன் இருவரையும் சமாதானப்படுத்த முயன்றுள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த சக்திவேல், புனிஅமீன் ஆகிய இருவரும் சேர்ந்து, முருகனை தாக்கி, மிதித்துள்ளனர். இதில், முருகன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து மயிலாடுதுறை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை, நாகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த பின்னர், சக்திவேல், புனிஅமீன் ஆகிய இருவருக்கும் தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து நாகை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி ஆர். பத்மநாபன் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தார்.
அபராதத்தைக் கட்டத் தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.