சிதிலமடைந்துள்ள பெரியதும்பூர் முதல் பாலக்குறிச்சி வரையுள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகை மாவட்டம், கீழையூர் ஊராட்சி ஒன்றியம் பெரிய தும்பூர் முதல் பாலாக்குறிச்சி வரை உள்ள தார்ச்சாலை போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத நிலையில் சிதிலமடைந்துள்ளது. சாலையில் போடப்பட்டுள்ள கருங்கல் ஜல்லிகள் பெயர்ந்து சாலை முழுவதும் சிதறிக்கிடப்பதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர், பாதசாரிகள் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். பள்ளி மாணவர்கள் சைக்கிளில் செல்லகூட முடியாமல் அவதிபடுகின்றனர்.
பள்ளமும், மேடாக உள்ள சாலையில் வாகனங்களில் செல்வோர் அடிக்கடி விபத்துகளில் சிக்கி காயமடைகின்றனர். கிராம மக்கள் ஒருங்கிணைந்து சாலையில் சிதறிக் கிடந்த கருங்கல் ஜல்லிகளை சேகரித்து சாலையோரங்களில் குவியல், குவியல்களாக வைத்து இச்சாலையைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், பெரியதூம்பூர் முதல் பாலக்குறிச்சி வரையுள்ள சாலையை சீரமைக்க நாகை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.