பெண் வழக்குரைஞர் மற்றும் அவரது குடும்பத்தினர் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, மயிலாடுதுறையில் வழக்குரைஞர்கள் வெள்ளிக்கிழமை நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை அருகே திருவிளையாட்டம் கிராமத்தில் சாராய வியாபாரிகளால் நிர்மலா என்ற பெண் வழக்குரைஞரும், அவரது குடும்பத்தினர்கள் 4 பேரும் கடந்த வாரம் தாக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் தற்போது மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், வழக்குரைஞரை தாக்கிய சாராய வியாபாரிகள் மீது சாதாரண பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்ததுடன், சாராய வியாபாரிகளிடமிருந்தும் புகார் பெற்று, பாதிக்கப்பட்ட வழக்குரைஞர் மீது கொலை மிரட்டல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதைக்கண்டித்தும், வழக்குரைஞர் மீதான வழக்கை வாபஸ் பெற வலியுறுத்தியும், சாராய வியாபாரிகள் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தியும், மயிலாடுதுறையில் வழக்குரைஞர்கள் ஒருநாள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதனால், நீதிமன்ற அன்றாடப் பணிகள் பாதிக்கப்பட்டன.