மாட்டுக் கறியின் ருசியைப் புகழ்ந்து முகநூலில் பதிவிட்ட இளைஞர் வியாழக்கிழமை இரவு கீழ்வேளூர் அருகே தாக்கப்பட்டார். இது தொடர்பாக 4 பேர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
கீழ்வேளூர் காவல் சரகத்துக்குள்பட்ட பொரவாச்சேரி பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முகமது பைசான்(24). இவர், மாட்டுக் கறியின் ருசியைப் புகழ்ந்து தனது முகநூலில் இரு நாள்களுக்கு முன்பு பதிவிட்டுள்ளார்.
இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு பொரவாச்சேரி மாரியம்மன் கோயில் அருகே நின்று கொண்டிருந்த முகமது பைசானை, ஒரு கும்பல் இரும்பு கம்பி, கட்டை, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியது. இதில், காயமடைந்த அவர், நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து கீழ்வேளூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு, முகமது பைசான் தனது முகநூலில் மாட்டுக் கறி குறித்து பதிவிட்டதால் ஆத்திரமடைந்த, பொரவாச்சேரி பகுதியைச் சேர்ந்த என். தினேஷ்(24), ஆர். அகத்தியன்(28), ஆ. கணேஷ்குமார்(27), எம். மோகன்குமார்(28) ஆகியோர் அவரைத் தாக்கியதாக வழக்குப் பதிவு செய்து, 4 பேரையும் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.