சீர்காழி அருகே உள்ள நல்லநாயகபுரத்தில் மழையுடன் கூடிய லேசான காற்றுக்கே இரண்டு மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன.
சீர்காழி, கொள்ளிடம் பகுதியில் இரு தினங்களுக்கு முன்னர் இரவு லேசான காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை சுமார் ஒரு மணிநேரம் நீடித்தது. இதில் கொள்ளிடம் அருகே நல்லநாயகபுரம் பிரதான சாலையின் ஓரத்தில் இருந்த மின் கம்பங்கள் அடியோடு முறிந்து விழுந்தன. இதனால், மின் கம்பிகளும் அறுந்து விழுந்தன. இரவு நேரம் என்பதால் அப்பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லை. எனவே யாருக்கும் பாதிப்பு இல்லாமல் தப்பினர். தகவலறிந்து வந்த மின்வாரிய ஊழியர்கள், மின்னோட்டத்தைத் துண்டித்து வேறு பகுதியிலிருந்து நல்லநாயகபுரம் கிராமத்துக்கு மின்சாரம் வழங்கினர்.
இதுகுறித்து ஓய்வு பெற்ற உதவி பொறியாளர் ஒருவர் கூறுகையில், சமீப காலங்களாக கிராமப் பகுதிகளில் புதிதாக புதைக்கப்பட்ட மின்கம்பங்கள் தரமற்று எளிதில் முறிந்து விழும் நிலையில் உள்ளன. எனவே கிராமப் பகுதிகளில் புதைக்கப்பட்டுள்ள தரமற்ற மின் கம்பங்களை அகற்றி விட்டு புதிய மின் கம்பங்களைப் புதைத்து மின் விநியோகம் செய்ய வேண்டும் என்றார்.