சீர்காழி அருகே பணிகள் தொடங்கி 5 மாதங்கள் ஆகியும் சாலைப் பணி முழுமை பெறாமல் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட துளசேந்திரபுரம் ஊராட்சி தைக்கால் முதல் கடைக்கண் விநாயகநல்லூர் வரை இரண்டரை கிலோமீட்டர் தூரம் சாலைப் பணி தொடங்கியது.
இதற்காக அப்பகுதி சாலை செப்பனிடப்பட்டு, முதல் அடுக்கு செம்மண் இட்டு சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் தொடங்கி 5 மாதங்களைக் கடந்தும் இரண்டாம் அடுக்கு, மேல்பூச்சு, தார்ச்சாலை இதுவரை அமைக்கப்படவில்லை.
இதனால் செம்மண் பரப்பிய முழுமைபெறாத சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர். மேலும், தார்ச்சாலை அமைக்கப்படாததால் புழுதி பறந்து இருசக்கர வாகன ஓட்டிகள் கண்களில் விழுகிறது. இதனால் கண் எரிச்சல், நுரையீரல் அழற்சி போன்ற பாதிப்புகளால் வாகன ஓட்டிகள், குடியிருப்புவாசிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆகையால், மழைக்காலம் தொடங்கும் முன்னர் இந்த பணியை நிறைவேற்ற வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சி தலைமை செயற்குழு உறுப்பினர் ஷாஜஹான் வலியுறுத்தியுள்ளார்.