மயிலாடுதுறை தருமபுரம் சாலையில் உள்ள 5 குடிசை வீடுகள் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீவிபத்தில் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன.
மயிலாடுதுறை லால்பகதூர் நகர் அருகில் தருமபுரம் சாலை ஆலமரத்தடி பகுதியைச் சேர்ந்தவர் காமராஜ். தேநீர் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் இருந்து தீப்பொறி பறந்ததால், கடை தீப்பிடித்து எரிந்தது. மேலும், காற்றின் வேகம் காரணமாக தீ மளமளவென அருகில் உள்ள வீடுகளிலும் பரவியது. இதில் காமராஜ் வீடு மற்றும் அருகில் உள்ள கணேஷ்குமார், குமார், முருகன், ராஜேந்திரன் ஆகியோரின் வீடுகளும் முற்றிலும் தீக்கிரையாகின.
தகவலறிந்து வந்த மயிலாடுதுறை தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் தீ மேலும் பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் 5 வீடுகளில் இருந்த பொருள்கள் அனைத்தும் முற்றிலும் எரிந்து சேதமாகின. மயிலாடுதுறை போலீஸார் வழக்குப்பதிந்துள்ளனர்.