திருவெண்காட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாஜக ஆலோசனைக் கூட்டத்தில் மயிலாடுதுறையைத் தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பாஜக மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி இணை பொறுப்பாளர் அகோரம் கலந்துகொண்டு பேசினார். மாவட்ட துணைத் தலைவர் துரை. செழியன் தலைமை வகித்தார். சீர்காழி ஒன்றிய தலைவர் அருள்ராஜன் வரவேற்றார். இதில், மயிலாடுதுறையைத் தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும். பெருந்தோட்டம் ஏரியை முற்றிலும் தூர்வார ஏதுவாக போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். பூம்புகார் சிலப்பதிகார கலைக்கூடத்தில் குடிநீர், தங்கும் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், மாவட்ட அமைப்புச் செயலாளர் சந்தோஷ், துணைத் தலைவர் மணிசெல்வம், மாவட்டச் செயலாளர் செந்தில் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முன்னாள் ஊராட்சி துணைத் தலைவர் கோபால் நன்றி கூறினார்.