நாகப்பட்டினம், ஜூன் 13: ஓய்வூதியர்களுக்கான குடும்பப் பாதுகாப்பு நிதியை ஒன்றரை லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கக் கூட்டம் நாகையில் அண்மையில் நடைபெற்றது. சங்கத்தின் வட்டத் துணைத் தலைவர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், சங்க செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. கூட்டத்தில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். ஓய்வூதியர்களுக்கு பொங்கல் பரிசு, இலவச பேருந்துப் பயண அட்டை ஆகியவற்றை வழங்க வேண்டும். குடும்பப் பாதுகாப்பு நிதியை ஒன்றரை லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்க நாகை மாவட்டத் தலைவர் எஸ். ரெங்கநாதன், மாவட்டச் செயலாளர் எம்.ஆர். சுப்பிரமணியன், பொருளாளர் சா. முருகேசன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற நிர்வாகி என். நடராஜன், ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் வி.என். நடராஜன் ஆகியோர் சங்கத்தின் சார்பில் முன்னெடுக்கப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்து பேசினர். ஜேசீஸ் சங்க மண்டல இயக்குநர் தா. அகத்தியன் வாழ்த்தி பேசினார்.
நாகை வட்டச் செயலாளர் ஆர். ராமானுஜம் வரவேற்றார். பொருளாளர் வீ. ரெத்தினம் நன்றி
கூறினார்.