திருச்செங்கோடு, ஜூன் 13: தில்லியில் கடந்த வாரம் நடைபெற்ற சர்வதேச அளவிலான தேக்வாண்டோ அகாதெமி போட்டியில் நாமக்கல் மாவட்ட தேக்வாண்டோ அகாதெமி மாணவர்கள் ஆறு தங்கப் பதக்கம், ஒரு வெள்ளிப் பதக்கம், ஒரு வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்தனர்.
தில்லியில் கடந்த வாரம் நடைபெற்ற சர்வதேச தேக்வாண்டோ போட்டியில் திருச்செங்கோடு டேக்வாண்டோ அகாதெமி மாணவர்கள் 9 பேர் தமிழகம் சார்பில் கலந்து கொண்டனர். இதில் கிராண்ட் மாஸ்டர் லீ ஜான் கி தலைமையில் நடைபெற்ற பிரேக்கிங் முறையில் நடைபெற்ற போட்டியில் 6 தங்கப் பதக்கமும், சண்டை போட்டியில் ஒரு வெள்ளிப் பதக்கமும், ஒரு வெண்கல பதக்கமும்
பெற்றனர்.
இந்தப் போட்டியில் கலந்து கொண்டவர்கள் அரசுப் பள்ளி மற்றும் தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களை நாமக்கல் மாவட்ட தேக்வாண்டோ அகாதெமி தலைவரும், முதுபெரும் அரசியல் தலைவர்களில் ஒருவருமான முன்னாள் எம்.பி. மற்றும் அரசியல் நிர்ணய சபைக் குழு உறுப்பினருமான காளியண்ண கவுண்டர் பாராட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் தேக்வாண்டோ மாநில பொதுச்செயலாளர் கேசவமனி, வழக்குரைஞர் ராஜேஸ்வரன் தியாகராஜன், முரளி கோபாலகிருஷ்ணன் தீபக் சஞ்சய் ஆகியோர் கலந்து கொண்டனர்.