கடலில் மூழ்கிய விசைப் படகு 2-ஆம் நாளாக தொடர்ந்த மீட்புப் பணிகள்

நாகை, நம்பியார் நகர் கடற்கரையில் நங்கூர பிணைப்பிலிருந்து விடுபட்டு கடலில் மூழ்கிய விசைப் படகை மீட்க மீனவர்கள்

நாகை, நம்பியார் நகர் கடற்கரையில் நங்கூர பிணைப்பிலிருந்து விடுபட்டு கடலில் மூழ்கிய விசைப் படகை மீட்க மீனவர்கள் 2-ஆம் நாளாக செவ்வாய்க்கிழமையும் தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டனர். 
இரு மீனவக் கிராமங்களுக்கிடையேயான கருத்து வேறுபாடு காரணமாக, நாகை நம்பியார் நகர் மீனவர்கள் தங்கள் படகுகளை  படகுத் துறையில் நிறுத்தாமல், நம்பியார் நகர் கடற்கரை பகுதியிலேயே நிறுத்தி வருகின்றனர். 
இந்த நிலையில், நம்பியார் நகர் கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த, நம்பியார் நகர் தெற்குத் தெருவைச் சேர்ந்த எஸ். சின்னத்தம்பி என்பவருக்குச் சொந்தமான விசைப் படகு, கடல் சீற்றத்தால் உருவான பேரலையில் சிக்கி, நங்கூரப் பிணைப்பிலிருந்து விடுபட்டு, கடலில் மூழ்கியது திங்கள்கிழமை காலை தெரியவந்தது. நம்பியார் நகரைச் சேர்ந்த மீனவர்கள் சுமார் 10-க்கும் மேற்பட்ட படகுகளில் கடலுக்குச் சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இதில், படகிலிருந்த வலை மற்றும் மீன்பிடி உபகரணங்கள் சில மீட்கப்பட்டன. இருப்பினும், திங்கள்கிழமை மாலை வரை மூழ்கிய விசைப் படகு மீட்கப்படவில்லை. 
இதையடுத்து, 2-ம் நாளாக செவ்வாய்க்கிழமை காலை முதல் மீனவர்கள் தீவிரமான மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். விசைப் படகுகள் மற்றும் இழுவை இயந்திரங்கள்  மூலம் கடலில் மூழ்கிய படகை இழுத்து கரை சேர்க்கும் நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டனர். 
நாகை ஆர்யநாட்டுத் தெரு கடல் பரப்பு அருகே அந்தப் படகு இழுத்து வரப்பட்ட போது, அந்தப் படகுடனான பிணைப்புத் துண்டாகி, படகு மீண்டும் கடலில் சிக்குண்டது. இதனால், 2-ஆம் நாள் மீட்புப் பணியிலும் விசைப் படகை மீட்க முடியாத சூழல் ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com