நாகையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியான மீன்வளப் பொறியியல் கல்லூரிக்கான கட்டடத்தை தமிழக முதல்வர் காணொலிக் காட்சி மூலம் திங்கள்கிழமை திறந்து வைத்தார்.
நாகையில் கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் மற்றும் மீன் வளத் தொழில் நுட்ப நிலையம் செயல்பட்டு வருகிறது.
இப்பல்கலைக்கழக வளாகத்தில், மீனவ மற்றும் அனைத்துப் பிரிவு மாணவர்களும் பயன்பெறும் வகையில், 24 ஆயிரம் சதுரஅடியில் ரூ.12 கோடி திட்ட மதிப்பீட்டில், வகுப்பறைகள், முதல்வர்அலுவலகம், ஆசிரியர்கள் அறை, ஆய்வகங்கள்அடங்கிய மீன்வளப் பொறியியல் கல்லூரிக்கான கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
இந்தக் கட்டடத்தை, தமிழக மீன்வளத் துறை அமைச்சர் டி. ஜெயக்குமார், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், மீன்வளத் துறை முதன்மைச் செயலர் டாக்டர் கே. கோபால் ஆகியோரது முன்னிலையில், தலைமைச் செயலகத்திலிருந்து தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இதையொட்டி, மீன்வளப் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில், நாகை மாவட்ட ஆட்சியர் ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். தொடர்ந்து, மீன்வளப் பொறியியல் கல்லூரிக்கான கட்டடத்தைப் பார்வையிட்டார். நாகை துணைஆட்சியர் ஏ.கே. கமல்கிஷோர், மீன்வளப் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் சு. பெலிக்ஸ், பதிவாளர் டாக்டர் ஏ. சீனிவாசன், முதன்மையர் டாக்டர் பி. ராஜேந்திரன் மற்றும் பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர்.