கஜா புயலின்போது பாதிக்கப்பட்ட 282 குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி, வெள்ளப்பள்ளம் கிராம மக்கள் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
கஜா புயலில் பாதிப்புக்குள்ளான நாகை மாவட்டம், வேதாரண்யம் வட்டம், வெள்ளப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த 282 குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு இதுவரை அரசால் அறிவிக்கப்பட்ட நிவாரணம் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த வெள்ளப்பள்ளம் கிராம மக்கள், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் புயல் நிவாரணம் வழங்கக் கோரி மனு அளித்தனர். நாம் தமிழர் கட்சியின் நாகை தெற்கு மாவட்டத் தலைவர் கு. ராஜேந்திரன், தலைஞாயிறு ஒன்றியச் செயலாளர் பா. விஜயானந்தன் உள்ளிட்டோர் கிராம மக்களுடன் வந்திருந்தனர்.