சீர்காழியில் நாகை வடக்கு மாவட்ட திமுக சார்பில் குடிநீர்த் தட்டுப்பாட்டை தீர்க்காத, மின்வெட்டு பிரச்னையை கண்டுக்கொள்ளாத அதிமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சீர்காழி பழைய பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு நகரச் செயலர் ம. சுப்பராயன் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலர்கள் மு. ஞானவேலன், தம்பி. சத்தியேந்திரன், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் ஆர். கலைவாணன், இளைஞரணி அமைப்பாளர் அலெக்சாண்டர் ஒன்றிய செயலாளர்கள் சசிக்குமார், செல்ல. சேதுரவிக்குமார் முன்னிலை வகித்தனர். நாகை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் நிவேதா. எம். முருகன் பங்கேற்று கண்டன உரையாற்றினார். தொடர்ந்து, ஹைட்ரோகார்பன், மீத்தேன் திட்டங்கள் வேண்டாம், குடிநீர்த் திட்டங்கள் வேண்டும், தடையில்லாத மின்சாரம் வேண்டும் என முழக்கங்கள் எழுப்பினர். இதில் சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர்கள் பன்னீர்செல்வம், ஜெக. வீரபாண்டியன், மாவட்ட பொறுப்பாள விஜயேஸ்வரன் உள்ளிட்ட 700-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.